மீண்டும் இணையும் 'டெடி' கூட்டணி

By செய்திப்பிரிவு

மீண்டும் சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஆர்யா.

சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சயீஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெடி'. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. விரைவில் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஆர்யா. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, தனது 'ஷோ பீப்பிள்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார் ஆர்யா.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. சக்தி செளந்தரராஜன் படம் மட்டுமின்றி, 'மெளனகுரு', 'மகாமுனி' ஆகிய படங்களின் இயக்குநர் சாந்தகுமார் இயக்கவுள்ள அடுத்த படத்தையும் தயாரித்து நாயகனாக நடிக்கவுள்ளார் ஆர்யா.

ஆர்யா நாயகனாக நடித்துள்ள 'சார்பட்டா', 'அரண்மனை 3' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முழுமையாக முடிந்துவிட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE