கலை அடுத்த நிலைக்குச் செல்லும்: பி.சி.ஸ்ரீராம் உறுதி

By செய்திப்பிரிவு

கலை அடுத்த நிலைக்குச் செல்லும் என்று காலண்டர் வெளியீட்டு விழாவில் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் பி.சி.ஸ்ரீராம். தற்போது தமிழில் 'நவரசா' ஆந்தலாஜியில் கெளதம் மேனன் இயக்கியுள்ள படம், தெலுங்கில் 'ரங்தே' மற்றும் 'தேங்க்யூ', இந்தியில் பால்கி இயக்கவுள்ள படம் ஆகியவற்றில் பணிபுரிந்து வருகிறார்.

சென்னையில் நடைபெற்ற 'தி பிரைட் ஷாப்' 2021-ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் பி.சி.ஸ்ரீராம். 12 மாடல் அழகிகளை வைத்து, 12 விதமான பாரம்பரியத் திருமண ஆடைகள் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் இந்த காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பி.சி.ஸ்ரீராம். அப்போது "கையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் அனைவருமே கேமரா மேன் ஆகிவிட்டார்களே. இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன" என்ற கேள்விக்கு பி.சி.ஸ்ரீராம் கூறியிருப்பதாவது:

"எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம். அவர்களுடைய திறமையை அவர்களே வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு பெரிய இயக்குநர் 30 வருடங்களுக்கு முன்பு, எப்போது எல்லோருடைய கையில் கேமரா கிடைக்குதோ, அப்போதுதான் கலைக்கான மேடையாக ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார். அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கலை அடுத்த நிலைக்குச் செல்லும் என்று நினைக்கிறேன்".

இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், சபாபதி ராஜரத்தினம், யோகேஷ் ஶ்ரீ ரத்னம், ரோஷன் ஶ்ரீ ரத்னம், பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், ஸ்டில்ஸ் ரவி, ஜவகர் அலி, மாடல் அழகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE