'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது 'எஸ்தல் எண்டர்டெயினர்' என்ற மற்றொரு தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய படமொன்றை அறிவித்துள்ளார் சேவியர் பிரிட்டோ. இதனை சீனு ராமசாமியிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.

'அழகிய கண்ணே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கவுள்ளார். இவர்களுடன் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பாடல்களை வைரமுத்து எழுத, என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ஏ.ஆர். அசோக் குமார், எடிட்டராக சங்கத் தமிழன், நடன இயக்குநராக ராதிகா மாஸ்டர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE