ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு: 'இந்தியன் 2' நிலை என்ன?

By செய்திப்பிரிவு

ஷங்கர் தனது அடுத்த படத்தை அறிவித்திருப்பதால், 'இந்தியன் 2' படத்தின் நிலை என்ன என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கமல் - லைகா நிறுவனம் கருத்து மோதல் உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் உள்ளது.

கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது வரை எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து எந்தவொரு தகவலுமே இல்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' மற்றும் தேர்தல் பணிகள் ஆகியவற்றில் மும்முரமாகிவிட்டார் கமல். இதர நடிகர்களும் அடுத்டுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். இயக்குநர் ஷங்கரோ ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், 'இந்தியன் 2' படத்தின் நிலை என்ன என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக விசாரித்த போது, "’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும். ஏனென்றால் கமல் அதுவரை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடவுள்ளார்.

அதற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கினால், ஒரே கட்டமாக முடிக்க வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. ராம் சரண் படத்தின் முதற்கட்ட பணிகளை ஷங்கர் கவனிக்கவுள்ளார். 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான், ராம் சரண் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார்.

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சுமார் 65% வரை முடிவடைந்துவிட்டது. ஆகையால், படம் கைவிட்டது என்ற தகவலில் எல்லாம் உண்மையில்லை. கண்டிப்பாக விரைவில் படப்பிடிப்பை முடித்து, 2022-ல் வெளியாகும்" என்று தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE