‘தறியுடன்’ நாவல் ‘சங்கத்தலைவன்’ திரைப்படமானது ஏன்? - இயக்குநர் விளக்கம்

By செய்திப்பிரிவு

'தறியுடன்' நாவலை 'சங்கத்தலைவன்' படமாக இயக்கியதற்கான காரணத்தை இயக்குநர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

‘தறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள ‘சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது. சமுத்திரகனி நடித்துள்ள இப்படத்தினை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறன் பட்டறை படைப்பாளி. இருவரும் சிறு வயது முதல் நண்பர்களும்கூட. இப்படத்தினை உதய் புரடெக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.

‘தறியுடன்’ நாவலைத் திரைப்படமாக்க என்ன காரணம் என்பது குறித்து இயக்குநர் மணிமாறன் கூறியதாவது :

நாவலின் கதாநாயகன் இரங்கன் ஒரு புரட்சியாளன். ஒரு புரட்சிகர கட்சி இரங்கனைப் போன்ற இளைஞர்களை எப்படி வென்றெடுத்து அவர்களை வர்கப் போராட்டத்தின் முன்னோடிகளாய் மாற்றுகிறது என்பதை ’தறியுடன்’ நாவல் அழகுறச் சொல்கிறது. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டங்கள், உழைக்கும் அனைவரையும் தட்டியெழுப்புகிறது.

நாவலில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் சாதாரண உழைப்பாளர் குடும்பங்களில் பிறந்தவர்கள். அந்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமைப் பெண்களாய் பரிணாம வளர்ச்சி பெறுகின்றனர். புரட்சிகர இயக்கத்தில் சங்கமிக்கின்றனர். ஆணாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். இதுபோன்ற வீரமும், நெகிழ்ச்சியும் என்னை இந்த நாவலைப் படமாக்கத் தூண்டியது.

காலத்தையும், களத்தையும் பதி வு செய்வதுதான் இலக்கியமும், திரைப்படமும். அது சமூக மாற்றத்துக்கான அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பார்கள். நானும் இந்த நாவலைத் திரைப்படமாக்குவதன் மூலம் கொஞ்சம் அக்கறைப்பட்டிருக்கிறேன் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இவ்வாறு மணிமாறன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE