ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம், படப்பிடிப்புத் தளத்தில் விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது.
இதில் நாயகனாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஷங்கர் - ராம் சரண் கூட்டணி படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு கூறுகையில் , "இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவர உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது படப்பிடிப்பு தொடங்கும், ராம் சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.