விதார்த்தின் 25-வது படம்: 'அண்ணாதுரை' இயக்குநர் இயக்குகிறார்

By செய்திப்பிரிவு

விதார்த் நடிப்பில் உருவாகி வரும் 25-வது படத்தை 'அண்ணாதுரை' இயக்குநர் சீனிவாசன் இயக்கி வருகிறார்.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, அதில் வரவேற்பும் பெறுபவர் நடிகர் விதார்த். தற்போது அவருடைய நடிப்பில் 'ஆயிரம் பொற்காசுகள்', 'அன்பறிவு', 'என்றாவது ஒரு நாள்', 'ஆற்றல்', 'அஞ்சாமை' உள்ளிட்ட பல படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. அவரது நடிப்பில் உருவாகும் 25-வது படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை சீனிவாசன் இயக்கிவருகிறார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'அண்ணாதுரை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.

ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்திப் பரபரப்பாக நகரும் படத்தில், ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறிப்பிட்ட கனவு வரவேண்டும் என்பது போல இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில் நடந்தது மற்ற அனைத்து பகுதிகளும் சென்னையில் படமாக்கப்பட்டது. படத்தில் இசை முக்கிய பங்கு வகிப்பதால் படத்திற்காக முன்னணி இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு, டீஸர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் விதார்த்துடன் தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ், பவுலின் ஜெசிகா, மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி, சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக விவேக் ஆனந்த், எடிட்டராக பிரவீன் கே.எல், கலை இயக்குநராக ஜெயச்சந்திரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE