'வலிமை' அப்டேட்: வெளிநாட்டில் சண்டைக்காட்சி; பிப்.15 படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

பிப்ரவரி 15-ம் தேதியுடன் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. மேலும், வெளிநாட்டில் ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சியைப் படமாக்க 'வலிமை' படக்குழு திட்டமிட்டு வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியவற்றைத் தாண்டி இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது "வலிமை அப்டேட்" என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

'வலிமை' படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள், அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் ஆகியவரை மட்டுமே இதுவரிஅ வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் எந்தவொரு ட்வீட் செய்தாலும், அதற்குப் பதிலாக "வலிமை அப்டேட்" என்று பதிவிட்டு வந்தார்கள்.

தற்போது முதன்முறையாக 'வலிமை' படம் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். அதில் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்படவுள்ளது எனவும், அதற்குப் பிறகு வெளிநாட்டில் ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் போனி கபூர். படத்தின் வெளியீடு குறித்து இன்னும் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளார். போனி கபூரின் இந்தப் பேட்டியால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE