2003ஆம் ஆண்டு ஜோத்பூர் நீதிமன்றத்தில், இரண்டு புல்வாய் மான்களை வேட்டையாடியதாக சல்மான் மீது நடந்த வழக்கு விசாரணையின் போது, தவறுதலாகப் போலிப் பிரமாணப் பத்திரங்களை தான் அளித்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மன்னிப்புக் கோரியுள்ளார். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வியாழக்கிழமை வரவிருக்கிறது.
அக்டோபர் 1998ஆம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹைன்’ படப்பிடிப்பின் போது இரண்டு புல்வாய் மான்களைக் கொன்ற குற்றத்துக்காக 2018ஆம் ஆண்டு சல்மானுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சல்மான் கான் மேல் முறையீடு செய்தார். அந்த இடத்தில் சல்மான் கானுடன் இருந்த சைப் அலி கான், தபு, நீலம், சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட நடிகர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, சல்மானின் ஆயுத உரிமத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது. ஆனால் 2003ஆம் ஆண்டு தனது உரிமம் காணாமல் போய்விட்டதாக சல்மான் கான் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றையும் அவர் பதிவு செய்தார்.
ஆனால் பின்னர் சல்மானின் உரிமைம் காணாமல் போகவில்லை என்றும், அது புதுப்பிக்கப்பட சமர்பிக்கப்பட்டதும் நீதிமன்றத்துக்குத் தெரிய வந்தது. இதனால் நீதிமன்றத்தைத் தவறுதலாக வழிநடத்தியதாக் சல்மான் மீது வழக்கு தொடர வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பாடி கோரியிருந்தார்.
புதன்கிழமை அன்று மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இதில் சல்மான் கலந்து கொண்டார். அப்போது ஆகஸ்ட் 8, 2003 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் தவறுதலாக தாக்கல் செய்யப்பட்டது என்றும் அதற்கு சல்மானை மன்னிக்க வேண்டும் என்றும் சல்மானின் வழக்கறிஞர் ஹஸ்திமல் சரஸ்வத் கோரினார்.
"சல்மான் தனது வேலைகளில் இருந்ததால் தனது உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பதை கவனிக்கவில்லை. எனவே தனது உரிமம் தொலைந்துவிட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்" என்று சரஸ்வத் வாதாடியுள்ளார்.