நீடிக்கும் சர்ச்சை: ஆரியுடன் புகைப்படம் தொடர்பான ரசிகரின் கேள்விக்கு அர்ச்சனா பதில்

ஆரியுடன் ஏன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்ற ரசிகரின் கேள்விக்கு அர்ச்சனா பதில் அளித்துள்ளார்.

பிக் பாஸ்- 4 நிகழ்ச்சியில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். கரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு, ஜனவரியில்தான் இந்நிகழ்ச்சி முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள்.

இதில் அர்ச்சனா தலைமையில் ரியோ, ஜித்தன் ரமேஷ், சோம், கேப்ரில்லா, நிஷா உள்ளிட்ட சிலர் அன்பு கேங் என்று அழைக்கப்பட்டனர். இது தொடர்பான அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் அனைத்துமே தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வைரலானது.

சமீபத்தில் ரியோவின் திருமண நாளன்று அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், "எனக்கு உங்களை ஒரு தனிநபராகப் பிடிக்கும் அர்ச்சனா. ஆனால், ஏன் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆரியுடன் இருக்குமாறு ஒரு புகைப்படத்தைக் கூட நீங்கள் பகிரவில்லை? உங்கள் பக்கத்தில் இருக்கும் தகுதி அவருக்கு இல்லையா?

பிக் பாஸுக்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது. சரிதான். நன்றாகச் சொன்னீர்கள். ஆனால், ஏன் ஆரியை உங்கள் குடும்பத்தில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? உங்கள் அன்பு, ஆதரவோடு, ஆரியுடன் இருக்கும் புகைப்படத்தை நீங்கள் பதிவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்போது என்னால் உங்கள் அன்பில் எந்தப் பாரபட்சமும் இல்லை என்பதை இன்னும் மகிழ்ச்சியாக, பலமாக நம்ப முடியும். எனது தாழ்மையான வேண்டுகோள். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டார்.

அந்த ரசிகருக்கு பதில் அளிக்கும் வகையில் அர்ச்சனா கூறியிருப்பதாவது:

"அவருடன் சேர்ந்தாற்போல புகைப்படமே இல்லை. இறுதி நாள் புகைப்படங்கள் எல்லாம் எண்டமால் நிறுவனத்திடம் உள்ளன. எங்களிடம் இல்லை. கொண்டாட்டம் படப்பிடிப்பில் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு நேரம் இல்லை. மொத்தமே 20 புகைப்படங்களை எடுத்திருப்போம். அவருடன் எடுக்கவில்லை. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் எடுத்துக் கொள்வோம்.

ஆரிக்கும் இதேபோல புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எழுதுங்கள். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பது அவருக்கும் தெரியவரும். உங்கள் செய்திக்கு நன்றி. உங்களுக்கு என் அன்பு. செல்லங்களா, அமைதி. என்னுடன் இருப்பது போன்ற புகைப்படம் அவரிடமும் இல்லை. இப்போது என்ன செய்யலாம்?"

இவ்வாறு அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE