கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நாடு முழுவதும் உள்ள திரைப்படத் தொழிலாளர்கள் பலரும் கடும் பொருளாதார இழப்பை சந்தித்தனர். மற்ற சினிமா துறைகளை போலவே கேரள சினிமாத் துறையும் கடும் பாதிப்பை எதிர்கொண்டது.
இந்நிலையில் மலையாள திரைப்பட நடிகர் சங்க (அம்மா) புதிய கட்டிடத்துக்கான திறப்பு விழா நேற்று கொச்சியின் நடைபெற்றது. இதில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகரும் ‘அம்மா’ தலைவருமான மோகன்லால் பேசும்போது கரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உதவும் வகையில் மிகப்பெரிய படம் ஒன்று அம்மா சார்பில் உருவாகவுள்ளதாகவும், அதை ப்ரியதர்ஷன் மற்றும் ராஜீவ் குமார் இருவரும் இணைந்து இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் 140 கலைஞர்கள் பணிபுரியவுள்ளதாகவும் மோகன்லால் தெரிவித்தார்.
விழாவின் போது இப்படத்துக்கான போஸ்டரை மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து வெளியிட்டனர். கணேஷ் குமார், பாபுராஜ், ஜகதீஷ், சித்திக் உள்ளிட்ட நடிகர்களுடம் உடன் இருந்தனர்.