இன்றைய காலச்சூழலுக்குத் தேவையான ஒரு படமாக 'மாநாடு' இருக்கும் என்று எஸ்.ஏ.சி தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நேற்று (பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'மாநாடு' படத்தின் டீஸர் வெளியானது. இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படம் தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
"சிம்புவுக்கு ஒரு அழுத்தமான அதேவேளையில் நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும். இன்றைய காலச்சூழலுக்குத் தேவையான ஒரு படமாகவும் இருக்கும். ஒரு நல்ல கருத்தை எந்த அளவுக்கு சுவாரசியமாகச் சொல்ல முடியுமோ அந்த அளவுக்குச் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. அவர் சீரியஸான விஷயத்தையே விளையாட்டாகச் சொல்லக்கூடிய ஒரு இயக்குநர்.
இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னைச் சுற்றி ஆபத்து இருக்கும். அது எனக்கே தெரியாது என்பது மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனக்கு அரசியல் ரொம்பப் பிடிக்கும். ஆகையால் அது தொடர்பான நிறையப் படங்கள் பண்ணுவதில்லை. ரொம்பத் தேர்வு செய்துதான் படங்களே பண்ணுகிறேன். 'மாநாடு' படத்தில் எனது கதாபாத்திரம் ரொம்பப் பிடித்துவிடவே நடித்துக் கொண்டிருக்கிறேன்".
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்