ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் வைபவ் நாயகனாக நடித்து வருகிறார்.
கரோனா ஊரடங்கு சமயத்தில் பல்வேறு ஓடிடி தளங்கள் போட்டிபோட்டு படங்களின் உரிமைகளைக் கைப்பற்றி வெளியிட்டு வந்தன. சில ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் கைப்பற்றி வெளியிட்டன. தற்போது, திரையரங்குகள் திறக்கப்பட்டு நிலைமை சீராகி இருப்பதால் ஓடிடி நிறுவனங்கள் நேரடியாகப் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளன.
தற்போது ஜீ5 ஒரிஜினல் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் படமொன்றைத் தயாரித்து வருகிறது. இதில் வைபவ், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாகிறது. ஜீ5 ஒரிஜினல் நிறுவனம் வழங்க மங்கி மேன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசாமி, எடிட்டராக கே.எல்.பிரவீன், இசையமைப்பாளராக பிரேம்ஜி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் ராதா மோகன் கூறுகையில், "ஓடிடியில் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்து அனைவரும் அற்புதமாக நடிக்கிறார்கள். வைபவ், வாணி போஜன், கருணாகரன், என் நண்பர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கை கோப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி’' என்றார்.
இந்தப் படம் குறித்து நடிகர் வைபவ் கூறுகையில், " ‘லாக்கப்', 'டானா', 'கப்பல்' போன்ற படங்களுக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தின் மூலம் ஜீ5 உடனான நட்பு தொடர்கிறது. இந்த நகைச்சுவைப் படத்தில் இதுவரை நான் ஏற்றிராத சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். குடும்பமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி எடுக்கப்படும் இப்படத்தில் இயக்குநர் ராதா மோகன், வாணி போஜன், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’' என்றார்.
இந்தப் படம் குறித்து நடிகை வாணி போஜன் கூறுகையில், '' ‘ஜீ5-ல் 'லாக்கப்' வெற்றிக்குப் பிறகு மீண்டும் வைபவ் உடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால், இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். நகைச்சுவை மிகுந்த இப்படத்தில் பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன். ராதா மோகன் சார், எம்.எஸ்.பாஸ்கர் சார், கருணாகரன் ஆகியோருடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், ‘‘இயக்குநர் ராதா மோகன் என்று சொல்வதை விட அவர் என் சகோதரர், என் நலனில் அக்கறை செலுத்துபவர், என்னை ரசிப்பவர், ரசித்துப் பல கதாபாத்திரங்களை உருவாக்குபவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவரோடு 'அழகிய தீயே' படத்தில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து 'மொழி', 'பிருந்தாவனம்', 'காற்றின் மொழி' இப்படிப் பல படங்களில் நடித்த எனக்கு, இந்தப் படத்திலும் அவருடன் இணைய வாய்ப்பளித்திருக்கிறார். மற்ற படங்கள் போல் இதிலும் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுப்பார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.
இந்தப் படம் குறித்து நடிகர் கருணாகரன் கூறுகையில், ''நான் சமீபத்தில் கேட்ட கதைகளில் இப்படத்தின் கதை மிகவும் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருந்தது. 'உப்பு கருவாடு' படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ராதா மோகனுடன் இணைவதில் மகிழ்ச்சி. அதே சமயம் வைபவ், எம்.எஸ்.பாஸ்கர், வாணிபோஜன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும் சந்தோஷம். இப்படத்தின் மூலம் அனைவரையும் மகிழ்விக்க ஆவலாக இருக்கிறேன்'' என்றார்.