'டான்' படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் - ப்ரியங்கா மோகன் ஜோடி இணைந்து நடிக்கவுள்ளது.
'டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களைத் தொடர்ந்து, 'டான்' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன்.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
தற்போது இந்தப் படத்தில் நடிக்கவுள்ளவர்களைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது. இதில் நாயகியாக ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி மற்றும் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் என அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' படத்தின் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து 'டான்' படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரத்திலிருந்து கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இங்கு சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.