‘முட்டாளே! அவர்கள் விவசாயிகளே அல்ல.. தீவிரவாதிகள்’ - பாடகி ரிஹானாவை சாடிய கங்கனா

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

இதில், போலீஸார் விதித்த கட்டுப்பாடுகளை மீறி செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டத்தை பற்றிய ஒரு செய்தியின் லிங்க்கை பகிர்ந்து ‘ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த பதிவு பெரும் வைரலானது. இதுவரை இந்த ட்வீட் 2 லட்சத்த்துக்கும் அதிகமான மக்களால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில்ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது.

இந்த ட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா ரிஹானாவை கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

யாரும் அதைப் பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் விவசாயிகளே அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள். அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமித்து, அமெரிக்காவைப் போல ஒரு சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக உட்கார், முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல.

இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE