'ஆர்டிகிள் 15' படத்திற்குப் பிறகு ஆயுஷ்மான் குரானா - அனுபவ் சின்ஹா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது.
அனுபவ் சின்ஹா இயக்கித் தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
இதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் ஆயுஷ்மான் குரானா - அனுபவ் சின்ஹா கூட்டணி மீண்டும் மற்றொரு படத்தில் இணைகிறது. இதனை ஆயுஷ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஆயுஷ்மான் பகிர்ந்துள்ளார். அதில், ''அனுபவ் சின்ஹாவுடன் மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. நான் நடிக்கும் ஜோஷ்வா என்னும் கதாபாத்திரத்தின் தோற்றம் இது. இப்படத்தை அனுபவ் சின்ஹா, மற்றும் டி-சிரீஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிக்கின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
‘அனேக்’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தின் கதைக்களம், மற்ற நடிகர் நடிகையர் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.