சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

படங்களில் நடித்து வருவது மட்டுமன்றி, சிறு முதலீட்டில் படங்களையும் தயாரித்து வருகிறார் சூர்யா. தற்போது அவருடைய தயாரிப்பில் தா.செ.ஞானவேல் இயக்கி வரும் படம், இரா.சரவணன் இயக்கியுள்ள படம், சரவ் சண்முகம் இயக்கி வரும் படம் உள்ளிட்ட சில படங்கள் தயாரிப்பில் உள்ளன.

தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்று படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது சூர்யா தயாரிப்பில் உருவாகும் 14-வது படமாகும். புதுமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கி வரும் இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மித்துன் மாணிக்கம், 'கோடங்கி' வடிவேல் முருகன், செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

நேற்று (ஜனவரி 31) சென்னையில் உள்ள கோகுல் ஸ்டுடியோவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் பூஜையில் படக்குழுவினருடன் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கச் செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக க்ரிஷ், எடிட்டராக சிவ சரவணன், கலை இயக்குநராக சி.ஜே.முஜிப்பூர் ரஹ்மான், ஆடை வடிவமைப்பாளராக வினோதினி பாண்டியன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE