'திட்டம் இரண்டு' படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் மும்முரம்

By செய்திப்பிரிவு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'திட்டம் இரண்டு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'பூமிகா', 'துருவ நட்சத்திரம்', 'இது வேதாளம் சொல்லும் கதை', 'இடம் பொருள் ஏவல்' மற்றும் 'திட்டம் இரண்டு' ஆகிய படங்கள் தயாராகி வந்தன. இதில் 'திட்டம் இரண்டு' படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அச்சுறுத்தல் குறைந்தவுடன் தொடங்கப்பட்டது. சென்னையில் ஒரே கட்டமாக இதர காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. 'Yours Shamefully' என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் விக்னேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக சதீஷ் ரகுநாதன், எடிட்டராக சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்குநராக ராகுல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

'திட்டம் இரண்டு' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தீவிரமாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE