'டான்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களைத் தொடர்ந்து, 'டான்' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
தற்போது இந்தப் படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக 'டாக்டர்' படத்தில் நடித்த ப்ரியங்கா அருள் மோகனே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
நாயகி மற்றும் வில்லன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. பிப்ரவரி 2-வது வாரத்திலிருந்து கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இங்கு சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.