தமிழில் ரீமேக் ஆகும் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா’: நாயகனாக சந்தானம் ஒப்பந்தம்

'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் நாயகனாக நடிக்கவுள்ளார் சந்தானம்.

ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன், ராம்தத், விஸ்வநாத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. 2019-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு முன்னணி திரையுலகப் பிரபலங்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், இதன் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது நவீன் கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

'வஞ்சகர் உலகம்' படத்தின் இயக்குநரான மனோஜ் பீடா இயக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக ரியா சுமன் நடிக்கவுள்ளார். விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

தற்போது 'சபாபதி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம். அதனைத் தொடர்ந்து 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' ரீமேக்கில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே அவருடைய நடிப்பில் 'டிக்கிலோனா', 'பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருப்பது நினைவு கூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE