தொல்லியல்துறை பின்னணியில் ஒரு திரில்லர் படம்

By மகராசன் மோகன்

தமிழில் தொல்லியல்துறையைப் பின்னணியாகக் கொண்டு ஒரு த்ரில்லர் படமொன்று உருவாகவுள்ளது.

‘மரகத நாணயம்’, ‘புருஸ்லீ’ , ‘ராட்சசன்’ உள்ளிட்ட படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னிமாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன் இயக்குநராக களம் இறங்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. காவல்துறை பின்னணியில் திகில் கலந்த திரில்லர் களமாக உருவாக உள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் செஞ்சியிலும், சென்னையிலும் படமாக்கப்பட உள்ளன.

இப்படம் குறித்து இயக்குநர் பெருமாள் வரதன் கூறியதாவது :

‘‘காவல்துறை, பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் பின்னணியில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதைக்களம் இது. சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் களமாகவும் விரியும் இப்படத்தில் பிரதானமாக சில தொல்லியல்துறை ஆய்வுகள் இடம்பெற உள்ளன. அது மிகப் பெரிய அளவில் பேசப்படும். முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்க உள்ள இப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்ற உள்ளனர். விரைவில் முழு கதாபாத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கான அறிவிப்பு இருக்கும்!’’ என்கிறார்.

இப்படத்துக்கு ‘முண்டாசுப்பட்டி’, ‘மரகத நாணயம்’ ‘ராட்சசன்’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். திரில்லர் கதைக்களப் பின்னணியில் எடுக்க உள்ள இப்படத்தினை ஏ.கே ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தனது முதல் திரைப்படமாகத் தயாரிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE