பவன் கல்யாணுக்கு நாயகியாக நிதி அகர்வால் ஒப்பந்தம்

க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் படத்தின் நாயகியாக நிதி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'பிங்க்' படத்தின் ரீமேக்கான 'வக்கீல் சாப்' படத்தில் நடித்து முடித்துள்ளார் பவன் கல்யாண். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து க்ரிஷ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பவன் கல்யாண். ஏற்கனவே, இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவுற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது.

இந்தப் படத்தின் நாயகி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது, இதில் பவன் கல்யாணுக்கு நாயகியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. முதன்முறையாக முன்னணி நாயகனுடன் நடிக்கவுள்ளதால், மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் நிதி அகர்வால்.

இந்தப் படத்தில் வேறு யாரெல்லாம் பவன் கல்யாணுடன் நடிக்கவுள்ளார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பதெல்லாம் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE