'கே.ஜி.எஃப் 2' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'கே.ஜி.எஃப் 2' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

'கே.ஜி.எஃப்' படத்தைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதனால் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒரு வெளியீட்டுத் தேதியை ஆலோசித்து வந்தது படக்குழு. இறுதியாக ஜூலை 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கேற்ப கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீஸருக்கு இணையத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், யூடியூப் தளத்தில் பல்வேறு சாதனைகளையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

'கே.ஜி.எஃப் 2' பணிகளை முடித்துவிட்டு, பிரபாஸ் நடிக்கவுள்ள 'சலார்' படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். இதற்கான முதற்கட்டப் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்தப் படத்தையும் 'கே.ஜி.எஃப்' தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE