'பத்து தல' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'பத்து தல' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'முஃப்தி'. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தற்போது இந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு, 'சில்லுனு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. 'பத்து தல' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில், இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொஞ்சம் வில்லத்தனம் கலந்த காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறுகிறார்கள். சிம்பு - கெளதம் மேனன் இருவருமே நெருங்கிய நண்பர்கள். மற்றொரு இயக்குநர் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் தொடங்கப்படவுள்ளது. கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE