அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முடிவு செய்துள்ளது.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அச்சுறுத்தல் குறைந்தவுடன் நவம்பர் 10-ம் தேதி மாரேடுமில்லி காடுகளில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய காடுகளில் 'புஷ்பா' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் 'புஷ்பா' படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
தற்போது இந்தப் படம் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சுதந்திர தின விடுமுறையைக் கணக்கில் கொண்டு இந்தத் தேதியைப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்துக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.