'கர்ணன்' படத்தைப் பார்த்துவிட்டு, புகழாரம் சூட்டி கருத்து தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திருநெல்வேலிக்கு அருகில் பிரம்மாண்டமான கிராமம் போன்ற அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் சில காட்சிகளை மட்டும் சென்னையில் அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழு.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முழுப்படத்தையும் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் சந்தோஷ் நாராயணன் கூறியிருப்பதாவது:
"கர்ணன் பார்த்தேன், வியந்து போனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி க்ரியேஷன்ஸ் மற்றும் அற்புதமான குழுவினர் அனைவரையும் நினைத்துப் பெருமையடைகிறேன். கர்ணன் - அனைத்தும் கொடுப்பான்!!"
இவ்வாறு சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
'கர்ணன்' படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.