‘ஆர்.ஆர்.ஆர்’ - ‘மைதான்’ ரிலீஸ் விவகாரம்: போனி கபூர் விளக்கம்

By ஐஏஎன்எஸ்

‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘மைதான்’ படங்களின் ரிலீஸ் தேதி விவகாரம் குறித்து போனி கபூர் விளக்கமளித்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

வரும் அக்டோபர் 13, 2021 அன்று ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பின் மூலம் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தனது ‘மைதான்’ படம் வெளியாகும் அதே நாளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியாவதால் படக்குழு மீது தயாரிப்பாளர் போனி கபூர் கடும் அதிருப்தியில் இருப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் போனி கபூர் கருத்து தெரிவித்துள்ளார். ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த கரோனா காலகட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே திரையுலகைச் சேர்ந்த அனைவரது வேண்டுகோளாக இருக்கிறது. இரண்டு பெரிய படங்கள் ஒரு தேதியில் வருவது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு. நான் என்னுடைய ‘மைதான்’ திரைப்படத்தின் தேதியை நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்து விட்டேன். ஆனால் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி நேற்று தான் தீர்மானிக்கப்பட்டது. முடிவெடுக்கும் முன்னர் படக்குழுவினர் என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டியது தானே அறம்?

பார்வையாளர்கள் பிரிவதால் விநியோகஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இங்கே சகோதரத்துவம் இல்லாதது போன்ற தோற்றம் உருவாகும்.

நான் ராஜமௌலிக்கு போன் செய்து பேசியபோது படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பாளரின் கையில் இருப்பதாக கூறினார். நானும் ஒரு தயாரிப்பாளர்தான், ஒரு பிரச்சினையை கையிலெடுக்கும்போது முதலில் படக்குழுவினர், படத்தின் இயக்குநர், ஹீரோ ஆகியோரிடம் முதலில் ஆலோசிக்க வேண்டும் என்பதை நான் அறிவேன்.

இவ்வாறு போனி கபூர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE