'கே.ஜி.எஃப் 2' படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
'கே.ஜி.எஃப்' படத்தைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'கே.ஜி.எஃப்' படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், 'கே.ஜி. எஃப் 2' படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு, 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. பல மொழிகளுக்கும் ஒரே டீஸர் என்பதுபோல் திட்டமிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து, இந்தியாவின் பல்வேறு டீஸர் சாதனைகளையும் முறியடித்தது
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் இந்தி டப்பிங் உரிமையை எக்ஸல் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பாக ரித்தேஷ் சித்வானி மற்றும் ஃபர்ஹான் அக்தர் வாங்கியிருந்தனர். குறைந்த விலையில் வாங்கப்பட்ட அப்படத்தின் இந்தி டப்பிங் உரிமையால் அவர்கள் எதிர்பார்த்திராத மிகப்பெரிய லாபம் கிடைத்தது.
ஆனால், தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் 'கே.ஜி.எஃப் 2' படத்துக்கு நிலைமை தலைகீழ். அதே எக்ஸல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திடம் ஒரு மிகப்பெரிய தொகைக்கு படத்தின் இந்தி டப்பிங் உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொகை முதல் பாகத்துக்கான தொகையை விடப் பல மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.