'ஆர்.ஆர்.ஆர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பால் போனி கபூர் அதிருப்தி

By செய்திப்பிரிவு

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

முன்னதாக, கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் மும்முரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரவில் பெரும் சண்டைக் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை ஹைதராபாத்தில் படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. ஜனவரி இரண்டாவது வாரத்துக்குப் பின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 13, 2021 அன்று ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், இந்த அறிவிப்பு பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. பிரபல கால்பந்து ஆளுமையான செய்யது அப்துல் ரஹீமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ‘மைதான்’. அஜய் தேவ்கன் நடிக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு தசரா பண்டிகையின்போது இப்படம் வெளியாகும் என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் அஜய் தேவ்கனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் முன் போனி கபூரிடம் ஒரு வார்த்தை தெரிவித்துவிடுமாறு ராஜமௌலியிடம் அஜய் தேவ்கன் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், போனி கபூரிடம் எதுவும் சொல்லாமல் வெளியீட்டுத் தேதியை அறிவித்ததால் தற்போது போனி கபூர் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE