துபாயில் 'சர்காரு வாரி பாட்டா' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

மகேஷ்பாபு நடிக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படப்பிடிப்பு துபாயில் நேற்று தொடங்கியது.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இப்படத்துக்கான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகிவிட்டாலும் கரோனா அச்சுறுத்தலால் எந்த வேலைகளும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

தற்போது கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் படங்களின் படப்பிடிப்புப் பணிகளை மீண்டும் தொடங்கி வருகின்றன.

இந்நிலையில் நேற்று (26.01.21) ‘சர்காரு வாரி பாட்டா’ படப்பிடிப்பு துபாயில் தொடங்கியுள்ளது. துபாய் தொடர்பான காட்சிகளை 30 நாட்களில் முடித்து இந்தியா திரும்பப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து நேற்று இப்படத்தின் இயக்குநர் பரசுராம் பெட்லா வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறும்போது, ''இது எனக்கு மிகவும் சவாலான ஒரு படம். மகேஷ்பாபுவை இயக்குவதன் மூலம் என் கனவு நனவாகியுள்ளது. இப்படம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்'' என்றார்.

‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் கீர்த்தி சுரேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE