சக நடிகர் நடிகையரை அடிக்கடி வம்பிழுத்து வரும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், ஞாயிற்றுக்கிழமை அன்று நடிகை ஸ்வரா பாஸ்கரைச் சீண்டியுள்ளார். இதற்கு அவரும் தோழமையுடன் பதில் அளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று தனது ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்த ட்வீட் ஒன்றை கங்கணா மீண்டும் ட்வீட் செய்திருந்தார். இதில் இரண்டு புகைப்படங்கள் இருந்தன. ஒன்றில் கங்கணாவும், இன்னொன்றில் ஸ்வராவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடைகளை, நகைகளை அணிந்திருந்தனர். இதில் கங்கணாவின் தலைமுடி இருக்கும் பகுதியைக் குறிப்பிட்டுத் தரம் என்றும், ஸ்வாரவின் தலையைக் குறிப்பிட்டு மோசம் என்றும் குறிப்பிட்டு வார்த்தைகள் இருந்தன.
இதை ரீட்வீட் செய்திருந்த கங்கணா, "மக்கள் என்ன சொல்கிறார்கள் ஸ்வரா, இது உண்மையா" என்று சீண்டும் விதமாகப் பதிவிட்டிருந்தார். உடனே நெட்டிசன்கள் ஞாயிற்றுக் கிழமையின் மந்தகதியைப் போக்க கங்கணா நமக்கு பொழுதுபோக்கைத் தரப் போகிறார் என்று கருத்துப் பதிவிட ஆரம்பித்தார்கள்.
இதற்குப் பதிலளித்த கங்கணா, "மந்தமான நாளில் ஸ்வராவைக் கொஞ்சம் சீண்டலாம் என்று நினைத்தேன்" என்று குறிப்பிட்டார்.
» சுஷாந்த் செய்த தவறு: கங்கணா ரணாவத் ட்வீட்
» வாரிசு அரசியலைத் தாண்டி நடிகர்களைப் பாதிக்கும் விஷயம் இதுதான்: கங்கணா பதிவு
கங்கணாவுக்குப் பதில் சொன்ன ஸ்வரா, ''உங்கள் மந்தகதியைப் போக்க உதவுவதில் என்றுமே மகிழ்ச்சிதான் கங்கணா. எனக்கு உங்களைப் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் கங்கணாவும் - ஸ்வராவும் அரசியல் சார்புகளை வைத்து கருத்து மோதல்களில் ஈடுபட்டதுண்டு. இருவரும் ’தனு வெட்ஸ் மனு’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பதும் நினைவுகூரத்தக்கது.