கதிரேசன் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்கான 'லக்ஷ்மி' படத்தைத் தொடர்ந்து, தமிழில் கவனம் செலுத்தத் தொடங்கினார் லாரன்ஸ். 'ருத்ரன்', 'சந்திரமுகி 2' உள்ளிட்ட பல படங்களில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதில் எந்தப் படத்தை முதலில் தொடங்குவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.
தற்போது, முதலில் 'ருத்ரன்' படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இதனைத் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, தயாரித்து வருகிறார். இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.