ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் 'கலியுகம்': பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் 'கலியுகம்' படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான 'மாறா' படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விஷாலுடன் 'சக்ரா' படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவாகும் 'கலியுகம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பேரழிவுக்குப் பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக்கருத்தைக் கொண்ட களமாக இந்தப் படம் உருவாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

'கலியுகம்' படத்தின் கலை இயக்குநராக என்.சக்தி வெங்கட்ராஜ், ஒளிப்பதிவாளராக ராம்சரண், எடிட்டராக நிமல் நாசீர், ஆடை வடிவமைப்பாளராக ப்ரவீன் ராஜா, ஒலி வடிவமைப்பாளராக கெளரி சங்கர் மற்றும் ஜெய்சன் ஜோஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE