சூர்யாவுக்கு நாயகியாகும் ப்ரியங்கா அருள் மோகன்?

By செய்திப்பிரிவு

பாண்டிராஜ் - சூர்யா இணையும் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எனத் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு.

ஏனென்றால், ஒரே கட்டமாக படத்தை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சூர்யா 40' என அழைத்து வருகிறது படக்குழு.

இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியாங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்டர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்னும் அந்தப் படம் வெளியாகவில்லை. அதற்குள் சூர்யாவுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, படப்பூஜை அன்று வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE