மனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் மருத்துவர் சாந்தா: சூர்யா புகழாஞ்சலி

By செய்திப்பிரிவு

மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்று சூர்யா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும், உலகின் பல விருதுகளைப் பெற்றவரும், இந்தியாவின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மருத்துவத்துறையின் ரமோன் மகசேசே விருது பெற்ற புகழ்பெற்ற மருத்துவர் சாந்தா(93) உடல்நலக்குறைவால் ஜனவரி 19-ம் தேதியன்று அதிகாலை காலமானார்.

65 ஆண்டுக்காலம் புற்றுநோய்க்கெதிரான மருத்துவச் சிகிச்சையில் ஏழை, எளிய மக்களுக்குச் சேவையாற்றி வந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், முன்னணி திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேற்று (ஜனவரி 20) மருத்துவர் சாந்தா மறைவு குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அதற்குக் காலத்தின் சாட்சி. மனம் உருகும் அஞ்சலி"

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE