பிரபாஸ் வில்லனாக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை

'சலார்' படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

'கே.ஜி.எஃப் 1' படத்தைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் 2' படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'கே.ஜி.எஃப் 2' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் பிரபாஸை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.

இந்தப் படத்தையும் 'ஜே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பூஜை முடிவுற்று, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. ஆனால், விஜய் சேதுபதி இன்னும் சம்மதம் தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்களின் பணிகள் இருப்பதால், பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது விரைவில் தெரியவரும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் 'சலார்' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. தனது முந்தைய படங்களில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடன், இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார் பிரசாந்த் நீல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE