எனது நடிப்பை கவனிப்பார்களா என்று கவலைப்பட்டிருக்கிறேன்: விஜய் தேவரகொண்டா

தனது நடிப்பை யாராவது கவனிப்பீர்களா என்று தான் அஞ்சிய காலம் இருந்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் அவரது அடுத்த படமான லைகரை, அவரது ரசிகர்கள் கொண்டாடுவது பதிவாகியுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கு ரசிகர்கள் சிலர் பாலாபிஷேகம் செய்ய, சிலர் தங்கள் உடலில் படத்தின் பெயரை பச்சைக் குத்தியுள்ளனர்.

இதைப் பகிர்ந்துள்ள விஜய், "என் செல்லங்களே, நேற்று என்னை நீங்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டீர்கள். சந்தோஷமான உணர்ச்சிப் பெருக்கு. உங்கள் அன்பு என்னிடம் வந்து சேர்ந்தது.

ஒரு காலத்தில் எனது நடிப்பை யாராவது கவனிப்பார்களா, எனது திரைப்படத்தைப் பார்க்க திரையரங்குக்கு வருவார்களா என்று நான் யோசித்ததுண்டு. நேற்று லைகர் படத்தின் முதல் பார்வை போஸ்டரைத் தான் நாங்கள் வெளியிட்டோம். அதற்கு மாநிலம் முழுவதும் நடந்த கொண்டாட்டம் என்னை நெகிழச் செய்தது.

இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். டீஸருக்காகக் காத்திருங்கள். கண்டிப்பாக தேசிய அளவில் பரபரப்பாகும். உங்கள் அனைவருக்கும் என் அன்பு" என்று பகிர்ந்துள்ளார்.

லைகர் திரைப்படத்தை பூரி ஜகன்னாத் இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE