அரசியலில் ஆர்வமா? - சோனு சூட் விளக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி மாட்டிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும், அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

இதோடு பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தார்.

இது போன்ற ஏராளமான உதவிகளை சோனு சூட் செய்து வருவதால் அவருக்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாராட்டு குவிந்து வருகிறது. இன்னும் சிலரோ சோனு சூட் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் அதனால் தான் இது போன்ற உதவிகளை செய்து வருகிறார் என்று கூறிவந்தனர்.

இந்நிலையில் இது போன்ற விமர்சனங்களுக்கு சோனு சூட் பதிலளித்துள்ளார். இது குறித்து ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு அவர் அளித்த் பேட்டியில் கூறியுள்ளதாவது:

எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இல்லாததால் மட்டுமே என்னால் இது போன்ற உதவிகளை செய்யமுடிந்தது. இல்லையென்றால், ஒவ்வொரு விஷயத்தை செய்வதற்கு முன்னால் என்னை நானே 100 கேள்விகள் கேட்க வேண்டியிருக்கும். மக்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது என்னுடைய முடிவு மட்டுமே. எனவே தான் என்னால் அவர்களை தொடர்பு கொள்ள முடிந்தது. கடந்த ஒரு ஆண்டில் ஏராளமான மக்களை நான் தொடர்பு கொண்டு வருகிறேன்.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE