'இன்று நேற்று நாளை 2' படப்பூஜையுடன் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

'இன்று நேற்று நாளை 2' படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டன.

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல் ராஜா இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்தார்.

2019-ம் ஆண்டு இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளதாகவும், ஆர்.ரவிக்குமார் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.பி.கார்த்திக் இயக்கவுள்ளார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது.

கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, இன்று (ஜனவரி 18) காலை சென்னையில் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், முனீஷ்காந்த் மற்றும் கருணாகரன் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

2-ம் பாகத்தை 'இன்று நேற்று நாளை' படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.பி.கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் எழுதியிருக்கிறார். சி.வி.குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரியவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE