வாரணாசியில் சாலையோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இதுவரை சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது ராஜஸ்தானில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம வாரணாசிக்கு தனது நண்பர் குழுவுடன் சென்றுள்ளார். அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த அவர் அருகில் உள்ள சாலையோர கடை ஒன்றில் நுழைந்துள்ளார்.
தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்ததால் யாருக்கும் அவரை முதலில் அடையாளம் தெரியவில்லை. பின்னர் சாப்பிடுவதற்காக முகக் கவசத்தை நீக்கியதும் கடைக்காரர் அவரை அடையாளம் கண்டுள்ளார்.
இது குறித்து அந்த கடையின் உரிமையாளரான சுபம் கேசரி கூறியதாவது:
எங்கள் கடைக்கு அவர் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பனாரஸ் சாட் வகைகள் அனைத்தையும் அவர் ரசித்து சாப்பிட்டார்.
அவருக்கு அவை மிகவும் பிடித்துப் போனது, எனவே அடுத்த நாளும் எங்கள் கடைக்கு வந்தார். மற்ற சுற்றுலாப் பயணிகளைப் போலவே அவரும் சாலையில் நின்று கொண்டே சாப்பிட விரும்பினார். உணவு தயாராகும் முறை கேட்டுத் தெரிந்து கொண்டு அவற்றை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்தக் கடையின் உரிமையாளரான சுபம் கேசரியுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.