பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்

By செய்திப்பிரிவு

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சர்ச்சையானதால், விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி, தற்போது தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இன்று (ஜனவரி 16) விஜய் சேதுபதியின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று (ஜனவரி 15) இரவு சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட குழுவினருடன் விஜய் சேதுபதி பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பலரும் விஜய் சேதுபதி இப்படிச் செய்யக் கூடாது எனவும், இதுவொரு தவறான முன்னுதாரணம் என்று கருத்து தெரிவித்து வந்தார்கள். தற்போது இது தொடர்பாக விஜய் சேதுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:

"எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன்.

தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது.

இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்."

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE