'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு

'மணிகார்னிகா' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை கங்கணா ரணாவத் அறிவித்துள்ளார். அதே நேரம் தனது கதையை உரிமையின்றி கங்கணா எடுத்துக்கொண்டதாக எழுத்தாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2019-ம் ஆண்டு, ஜான்ஸி ராணியின் வாழ்க்கைக் கதையைச் சொன்ன படம் 'மணிகார்னிகா: தி குயின் ஆஃப் ஜான்ஸி'. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதே பெயரில் திரை வரிசை ஒன்றை கங்கணா திட்டமிட்டுள்ளார். இரண்டாவது பாகத்துக்கு 'மணிகார்னிகா ரிட்டர்ன்ஸ்: தி லெஜண்ட் ஆஃப் திட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது காஷ்மீரின் முதல் பெண் ஆட்சியாளராக அறியப்படும் திட்டா என்பவரின் வாழ்க்கைக் கதை. முதல் பாகத்தைத் தயாரித்த கமல் ஜெயின், கங்கணாவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தற்போது, 'திட்டா-காஷ்மீரி கி யோதா ராணி' என்கிற புத்தகத்தின் ஆசிரியர் ஆஷிஷ் கவுல், தனது கதை உரிமையை கங்கணா அப்பட்டமாக மீறியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது சட்டவிரோதமானது என்று கூறியிருக்கும் ஆஷிஷ், இந்த விவகாரத்தில் கங்கணா தெரியாமல் இதைச் செய்திருப்பார் என்றே தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

மேலும், அறிவார்ந்த, தேசியவாத உணர்வு கொண்ட, முக்கியப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் கங்கணா இப்படிச் சிறுமையாக நடந்திருப்பது தனக்கு அதிர்ச்சி என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக கங்கணா தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE