'சலார்' படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்

By செய்திப்பிரிவு

பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

'கே.ஜி.எஃப் 1' படத்தைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் 2' படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், 'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.

இதில் பிரபாஸ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'சலார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், 'சலார்' படத்தின் பூஜை இன்று (ஜனவரி 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக 'கே.ஜி.எஃப்' நாயகன் யாஷ் கலந்து கொண்டார்.

இன்று படப்பூஜையுடன் பணிகளைத் தொடங்கியுள்ள படக்குழு, இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது. விரைவில் பிரபாஸுடன் நடிக்கவுள்ளவர்களையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் 'சலார்' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE