'அந்தாதூன்' இயக்குநர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 'அந்தாதூன்' இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் தனது அடுத்த படத்துக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். முந்தைய படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், இதில் யார் நடிப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பு நிலவியது.
» பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஓடிடி ஆதரவு கிடைக்கிறது: தயாரிப்பாளர் மதியழகன் காட்டம்
தற்போது இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒப்பந்தமாகியுள்ள 2-வது இந்திப் படமாக இது அமைந்துள்ளது. 'மாநகரம்' இந்தி ரீமேக்கை முடித்துவிட்டு, ஸ்ரீராம் ராகவன் படத்தைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைஃப்பும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவுமே வெளியாகவில்லை. தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.