'மாஸ்டர்' படத்தின் லீக்கான காட்சிகளைப் பகிர வேண்டாம் என்று தென்னிந்தியத் திரையுலகினர் ஒன்றிணைந்து கூறியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார்.
நாளை (ஜனவரி 13) இப்படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படத்தைத் திரையரங்குகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேற்று (ஜனவரி 12) மாலை திடீரென்று படத்தின் சில காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக இணையத்தில் லீக் ஆயின. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். யாரும் இந்தக் காட்சிகளைப் பகிராதீர்கள், எங்களுடைய ஒன்றரை ஆண்டு உழைப்பு என்று இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.
» 3 வாரங்களுக்குள் எந்த ஓடிடியிலும் வெளியீடு இல்லை: 'ஈஸ்வரன்' தயாரிப்பாளர்
» 'மாஸ்டர்' காட்சிகள் லீக் ஆனதின் பின்னணி: நடவடிக்கை எடுக்கப் படக்குழு தீவிரம்
'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமன்றி, தென்னிந்தியத் திரையுலகினர் பலரும் ட்வீட் செய்துள்ளனர். இது அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 10 மாதங்கள் மூடப்பட்டு இருந்த திரையரங்குகள் நவம்பர் மாதம்தான் திறக்கப்பட்டன. அப்போதிலிருந்து பெரிய நடிகர்களின் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. இதனால் பொதுமக்களும் திரையரங்குகளுக்கு வரவில்லை.
திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியாகும், முதல் பெரிய நடிகரின் படமாக 'மாஸ்டர்' அமைந்துள்ளது. இதில் காட்சிகள் வேறு லீக்கானதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுடைய உழைப்பை மனதில் வைத்து யாரும் பகிராதீர்கள் என்று பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர்கள் பிரசாந்த் நீல், கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, நடிகர்கள் அருண் விஜய், விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலரும் ட்வீட் செய்துள்ளனர்.
மேலும் ரஜினி, அஜித், சூர்யா, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் 'மாஸ்டர்' காட்சிகளைப் பகிர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.