சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகே, 'அண்ணாத்த' படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, அங்கு கரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.
தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் வரப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார் ரஜினி. இதனால், 'அண்ணாத்த' படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால், தேர்தலுக்குப் பிறகு சென்னையில் 'அண்ணாத்த' படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளது. இனிமேல் ஹைதராபாத் படப்பிடிப்பு வேண்டாம், அங்குள்ள அரங்குகளை எல்லாம் சென்னையிலேயே போட்டுப் படப்பிடிப்பை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர். அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பும் முடிந்தவுடன், வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.