'கே.ஜி.எஃப் 2' டீஸருக்கு மாபெரும் வரவேற்பு: யாஷ் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீஸருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் யாஷ் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

'கே.ஜி.எஃப்' படத்தைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'கே.ஜி.எஃப்' படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், 'கே.ஜி. எஃப் 2' படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு, 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. பல மொழிகளுக்கும் ஒரே டீஸர் என்பதுபோல் திட்டமிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து, கன்னடத் திரையுலகின் பல்வேறு டீஸர் சாதனைகளை முறியடித்தது.

'கே.ஜி.எஃப் 2' டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து யாஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என்னுடைய ரசிகர்களுக்கு, நீங்கள் எப்போதும் எனக்கு உறுதுணையாக நின்று, அதீத அன்பை வழங்கினீர்கள். உண்மையில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து உங்களை மகிழ்விப்பேன்".

இவ்வாறு யாஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE