திட்டமிட்டபடி வெளியாகாத 'க்ராக்': ரசிகர்கள் அதிர்ச்சி - காரணம்  என்ன?

By செய்திப்பிரிவு

'க்ராக்' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாத காரணத்தால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோபிசந்த் மாலினெனி இயக்கத்தில் ரவி தேஜா, சமுத்திரக்கனி, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'க்ராக்'. தாகூர் மது தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, இன்று (ஜனவரி 9) வெளியாவதாக இருந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி இன்று (ஜனவரி 9) காலை படம் வெளியாகவில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடியால் காலைக் காட்சி தொடங்கப்படவில்லை. மதியக் காட்சிக்குள் நிலைமை சரிசெய்யப்பட்டு, வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் என்ன?

'க்ராக்' வெளியாகாததற்குக் காரணம் விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம்தான் என்கிறார்கள். என்னவென்றால் 'டெம்பர்' ரீமேக்காக 'அயோக்யா' படத்தை தமிழில் தாகூர் மதுதான் தயாரித்தார். அந்தப் படத்தின் உரிமையை 11 கோடி ரூபாய்க்கு ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். அந்தப் படமும் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. கடைசி நேரத்தில் பைனான்ஸ் சிக்கலில் நின்றது.

அந்தத் தருணத்தில் ஸ்கிரீன் சீன் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார் தாகூர் மது. அப்போது இந்தப் படம் திட்டமிட்டபடி வசூல் செய்யவில்லை என்றால், நஷ்டமடைந்த பணத்தைத் திருப்பி தந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் 'அயோக்யா' திரைப்படம் 8 கோடி ரூபாய்தான் வசூல் செய்தது.

இதனால் மீதமுள்ள பணத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு தாகூர் மது கொடுக்க வேண்டியதிருந்தது. பலமுறை கேட்டும் எந்தவொரு பதிலுமில்லை என்பதால், 'க்ராக்' படத்தின் வெளியீட்டுக்குத் தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியது ஸ்கிரீன் சீன் நிறுவனம். அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

அந்த உத்தரவை க்யூப் நிறுவனத்துக்கு அனுப்பிவைத்து, 'க்ராக்' படத்தின் வெளியீட்டை நிறுத்தியுள்ளனர். தற்போது ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்குப் பணம் அளித்தால் மட்டுமே, 'க்ராக்' படம் வெளியாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE