'கே.ஜி.எஃப் 2' கதாபாத்திரம் சக்தி வாய்ந்தது; சிக்கலானதும் கூட: ரவீனா டண்டன்

By செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப் 2' கதாபாத்திரம் சக்தி வாய்ந்தது, சிக்கலானதும் கூட என்று ரவீனா டண்டன் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கே.ஜி.எஃப் 2'. ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், 2-ம் பாகத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'கே.ஜி.எஃப் 2' படத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை இணைத்துள்ளார் பிரசாந்த் நீல்.

'கே.ஜி.எஃப் 2' படத்தில் நடித்திருப்பது குறித்து ரவீனா டண்டன் கூறியிருப்பதாவது:

"யாஷ் ஒரு சிறந்த மனிதர். அவருடன் நடித்த அனுபவம் பிரமாதமானது. அவருடைய திறமைகள் வியக்கத்தக்கவை. பார்த்துப் பார்த்துப் பக்குவமாகப் பணி செய்யும் நடிகர். அவருடன் நடித்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. என்னைப்போல் எனது ரசிகர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர். சமூக வலைதளங்களில் அவர்களின் ஆர்ப்பரிப்பைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

என்னைத் திரையில் யாஷ் உடன் பார்க்க அவர்கள் குதூகலமாகக் காத்திருக்கின்றனர். நானும் குதூகலத்துடன்தான் பணியாற்றினேன். 'கே.ஜி.எஃப் 1' பிரம்மாண்ட வெற்றி கண்ட படம். அதே எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் 'கே.ஜி.எஃப் 2'வை எதிர்நோக்கியுள்ளனர். 'கே.ஜி.எஃப் 2' படத்தில் எனது கதாபாத்திரம் மிக மிக வித்தியாசமானது. சுவாரஸ்யமானதும் கூட. ஆனால், அதைத்தாண்டி கதாபாத்திரம் குறித்து இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது.

நான் ஏற்று நடிக்கும் ராமிகா சென் கதாபாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது, சிக்கலானதும் கூட. அழுத்தமான அந்தக் கதாபாத்திரத்தின் போக்கை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் கணித்துவிடமுடியாது. அடர்த்தியான கதாபாத்திரம் என்பதால் நான் திரையில் தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறேனா என ரசிகர்கள் கேட்கலாம். ஆனால், அதை ரசிகர்கள் காத்திருந்து, திரைப்படத்தில் பார்த்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும்.

முதன்முதலில் பிரசாந்த் நீல் எனது கதாபாத்திரத்தைப் பற்றி விளக்கியபோதே எனக்குக் கதைக்களம் மிகவும் பிடித்துவிட்டது. அப்போது நான் 'கே.ஜி.எஃப்' முதல் பாகத்தைப் பார்த்திருக்கவில்லை, ஆனாலும் எனக்குக் கதைக்களம் மிகவும் பிடித்திருந்தது. அப்புறம் 'கே.ஜி.எஃப்' முதல் பாகத்தைப் பார்த்தேன், ஆச்சரியத்தில் மூழ்கினேன். முற்றிலுமாக என்னை ஆட்கொண்டுவிட்டது அப்படம். சினிமா வரலாற்றில் 'கே.ஜி.எஃப் 1' ஒரு புதிய முயற்சி என்றே கூறுவேன்.

பிரசாந்த் நீல், ஹோம்பேல் ஃபிலிம்ஸுடன் இணைந்து பணியாற்றுவது போல் எனக்கு வேறெதுவும் சுவாரஸ்யமாக இருந்ததில்லை. பிரசாந்த், வித்தியாசமான கதைகளை, யோசனைகளை, படைப்பாற்றலைக் கொண்டவர். அதுதான் அவரை இத்தகைய வியத்தகு படைப்புகளைத் தர வைக்கிறது. அதுவும் பணிகளை அமைதியாகப் பக்குவமாக அவர் மேற்கொள்ளும் பாணியே தனிச்சிறப்பானது".

இவ்வாறு ரவீனா டண்டன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE