எப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மெனக்கெடுகிறேன் என்பதை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
'என்.ஜி.கே' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார் செல்வராகவன். தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இந்தப் படத்துக்கான லுக் டெஸ்ட்டை முடித்துவிட்டார் தனுஷ். தற்போது தனுஷுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது,. இதற்கிடையே, திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளையும் கவனித்து வருகிறார் செல்வராகவன்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி உருவாக்குகிறேன் என்பதை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"நாம் எழுதும்போது நம்முடைய கதாபாத்திரங்கள் தவிர்க்க முடியாதவை. அதற்கு நிறைய முயற்சிகளும், பயிற்சிகளும் தேவை. அந்த இடத்தை அடையத் திரும்பத் திரும்ப ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதினேன். ஆமாம், எழுதுவது மிகவும் கடினமானது. நான் மகேஷாக, வினோத்தாக, கதிராக, கொக்கி குமாராக, கணேஷ் ஆக, முத்துவாக, கார்த்திக் சுவாமிநாதனாக மாற வேண்டி இருந்தது".
இவ்வாறு செல்வராகவன் தெரிவித்துள்ளார்.